Tuesday, March 31, 2020

கொரோனா தந்தபாடமும் எங்கள் புறநானூற்றுப் பாடலும்…

இத்தாலி சாலையில் வீசிஎறிந்த பணக்கட்டும் கொரோனா தந்தபாடமும் எங்கள் புறநானூற்றுப் பாடலும்…
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!“ எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதோ!.. ஆம் திருவிளையாடல் படத்தில் தருமியின் பாடலில் பிழை இருப்பதாக குற்றம் சாட்டி, பாடலை எழுதியது கடவுளே! என்றாலும் குற்றம் குற்றமே என்று ஆன்றோர் சபையில் முழங்கிய நக்கீரரின் தமிழ்மொழிப் பற்றுக்கு இது ஓர் உதாரணம்.
இப்படி ஆயிரமாயிரம் உதாரணம் சொல்லலாம். தமிழ்மொழியின் மீது தீராத பற்றும் காதலும் கொண்ட பலபேர் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடம்பு இம்மண்ணுக்குள் உரமாக இருக்கலாம் அவர்களின் அனுபவங்களும் பாடல்களும் இன்றும் எங்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
புறநானூறு பண்டையத் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பெரு வேந்தர்கள் , குறுநில மன்னர்கள் , சால்பமைந்த பெரியோர்கள், புலவர்கள் எனப் பலரைப்பற்றியும் பாடிய நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் பண்டையத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு; பண்பாட்டுக் களஞ்சியம்; இலக்கியக் கருவூலம். பண்டையத் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள் , கடற்கரைகள் , காடுகள் பற்றிய புறப்பொருள் சார்ந்த செய்திகளும் புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகின்றன. புரவலர்கள் புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும் , அறமுறை பிறழாது மன்னர்கள் நிகழ்த்திய போர்முறைகளும் , மார்பிலே விழுப்புண்பட்டு வீர மரணம் அடைந்த வீரர்கள் பற்றிய செய்திகளும் விரவிக் கிடக்கின்றன. போரில் விழுப்புண் பட்டு களச்சாவடைந்த அடைந்த மகனின் உடலைக் கண்டு பெருமிதமெடைந்த தாயாரின் மறக்குணம் , மூவேந்தர்களின் ஆட்சி சிறப்புகள் , குறுநில மன்னர்களின் ஈகை , ஒப்புரவு முதலான பண்புகளும் இந்நூலுள் இடம்பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமான புறநானூற்றுப்பாடல் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் பாடல்…
கொரோனாவின் பிடியில் சிக்கி உலகே தத்தனித்துக் கொண்டிருக்கிறது. ரஜினி ஒரு படத்துல “ எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்“ னு பேசுவார்.. அதுபோல இந்தக் கொரோனாவும் எங்க இருந்து வருது.. எப்படி வருதுன்னு தெரியாம இன்றைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போகிறார்கள். அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். உலகம் முழுவதும் யாரையும் விட்டுவைக்கவில்லை… கொரோனா சென்ற பிறகு இங்கு பல தலைகீழ் மாற்றங்கள் நிகழும்..
எங்கள் தமிழ்க்கருவூலமான புறநானூறு (பாடல் 189)  வாழ்வின் அரிய தத்துவத்தை மிக எளிமையாக எடுத்துச் சொல்கிறது. வாருங்கள் அந்த தத்துவத்தைப் பார்ப்போம்..
“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்;
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்;
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;             
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினேதப்புந பலவே.
                                                            (புறம் – 189, நக்கீரர்)

ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம். யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை> கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.
                                                      (ed;wp- jkpo;j;Jsp)

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வார்த்தை விளையாட்டைப் பார்ப்போமா?  அவரின் “சங்கத்தமிழ்“ நூலிலிருந்து

மந்த மருத தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்!

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை!
பிணம் தின்னும் கழுகு போல நீவீர்!
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை!

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள்தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி!

வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டோரே!
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!

மாணிக்கப் பொறியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்!
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்!

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்
மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் – அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்!

பொதுமை மணம் கமழவேண்டும் என்று
புவியில் நாம் முழங்குகின்றோம் இன்று
புதுமையல்ல இம்முழக்கம் புலவர் பிரான் நக்கீரர்
புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார் கேளீர்!

“தெண் கடல் சூழ் தரணி முழுவதுமே – தன்
வெண்கொற்றக் குடையின்கீழ் வரவேண்டுமெனத்
தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்
கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதுல் போல்
காடகத்தில் விலங்குகளை வேட்டையாட
கண்ணுறக்கிமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற
கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்,
மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்
கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! – அவரை
மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்
கூழோ பொங்கலோ உண்டு களிக்க
ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு
நாழித் தானியம் மட்டும் போதுமென்றோ?

இப்படி

உண்பது நாழி உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்
வறுமையில் பலர் வாட வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தோர் அனைவருக்கும்
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும்போது – இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பதுதுான் வாழ்வெடுத்த பயனாகும்.
தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர். அதனைத்
தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில் நல்வேலாரெல்லாம்.

          என்ன ஓர் அருமையான புறநானூற்றுப்பாடல். இன்று உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் செத்து மடிகிறார்கள். இத்தாலியில் அதிகம்பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வீசியெறிந்த பணக்கட்டுகள் தான் சாலையில் கிடப்பதாய் ஊடகங்கள் செய்திகள் பளிச்சிடுகின்றன. சாலையில் கிடக்கும் பணத்தைப் பார்த்தபோது எனக்குள் விழித்துக்கொண்டதுதுான் இப்புறநானூற்றுப்பாடல்… படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே…. அனைவருக்கும் கொடுப்போம்.. முதலில் கைகொடுப்போம் அடுத்து உண்ண உணவு கொடுப்போம்.. உறங்க இடம் கொடுப்போம்.. அனைவருக்கும் இப்புவியில் ஆறடி நிலம் உண்டு என்பதை மறவோம்.. ஆறடி மட்டுமே போதுமானது என்பதையும் மறவோம்.

புறநானூறு குறித்து மேலும் விரிவாக அறிய…
கிளிக் செய்க.. http://www.tamilvu.org/library/l1280/html/l1280ind.htm

மு.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,பிஎட்., டி.டி.எட்.,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்)
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305  புலனம் 9698995853

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ரத்து செய்யலாமா? என்ன செய்யலாம்?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ரத்து செய்யலாமா? என்ன செய்யலாம்?
என்னுடைய தனிப்பட்ட கருத்து..
1.      காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். அத்தேர்வுகளின்போது மாணவர்களின் மனநிலையும், திருத்திய ஆசிரியர்களின் மனநிலையும் கண்டிப்பாக வேறுநிலையில் இருந்திருக்கும். அவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்தே வழங்கி பொதுத்தேர்வில் அதிகமாக கிடைக்கும் என்று ஆற்றுதல் நடந்திருக்கும். சிலபேர் தோல்வி அடைந்திருப்பார்கள்.  பார்டரில் உள்ள மாணவர்களை அப்படியே வைத்திருப்போம்.. அப்போதுதான் அடுத்த தேர்வில் படிப்பார்கள் என்று. எனவே தயவு செய்து காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
2.      கொரோனா பாதிப்பு முடிந்து மீண்டும் பள்ளி திறந்து ஏப்ரல் 15க்கு பின்னர் தேர்வு என்பதும் மாணவர் நலன்சார்ந்து கடினமானதாகும். 20 நாட்களுக்கு பின்னர் அவர்களை அழைத்து தேர்வுக்கு தயார் செய்வது என்பது குறுகிய கால இடைவெளி போல்… ஆதலால் ஏப்ரலில் தேர்வு என்பதும் வேண்டாம் ப்ளீஸ்
3.      சரி மாவட்ட அளவில் வினாத்தாள் எடுத்து அதை ஒரு தேர்வாக வைத்து அந்த மதிப்பெண்களைப் போடலாமா? தயவு செய்து வேண்டாம்.. பொதுத்தன்மை இல்லாமல் போய்விடும். இந்த மாவட்ட மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் படிப்பார்கள் என்பது 100சதவீதம் வாய்ப்பல்ல.. நிறைய பேர் தொழிற்கல்வி போகலாம்.. வேறு மாவட்ட பள்ளிகளுக்கு போகலாம். ஆகவே அந்த பொதுத்தன்மை போய்விடும்.
4.      தேர்வையே ரத்து செய்துவிட்டால்…….. இதுவும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.. எப்படி பதினொன்றாம் வகுப்பில் சேர்ப்பது. எந்த பிரிவில் சேர்ப்பது. தொழில்நுட்ப கல்விகளில் எப்படி சேர்ப்பது… முந்தைய தேர்வு மதிப்பெண்களை வைத்தா? தயவு செய்து வேண்டவே வேண்டாம்.
5.      அப்ப என்னதான் செய்யலாம். ஒரு வேளை இனி பள்ளி திறப்பு ஜுன் மாதம் எனில் ஜுன் மாதம் முழுவதும் கால அவகாசம் தந்து ஜுலை முதல் வாரத்தில் தேர்வு ஆரம்பித்து ஜுலை 15க்கு மேல் விடைத்தாள் திருத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வந்து அவர்களை காலாண்டுக்கு பின்னர் பதினொன்றாம் வகுப்பிலோ அல்லது தொழிற்கல்வி.. ஐடி.ஐ. படிப்புகளிலோ சேர்க்கலாம். அடுத்த வருடங்களுக்கான பாடத்திட்டத்தை கொஞசம் குறைத்து வைத்துக்கொள்ளலாம்.. உதாரணமாக பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடம் என்றால் 6 இயல் மட்டும் என்ற அளவில்…
6.      வரும் வருடங்களில் மேல்நிலை வகுப்பு போன்றே 10மதிப்பெண்கள் வருகை, ஒழுக்கம், ஒப்படைப்பு போன்றவற்றிற்காக இடைநிலை வகுப்புகளுக்கும் தாருங்கள்…..
7.      அனைத்து தேர்வுகளையும் இடைத்தேர்வு, திருப்புதல் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் இருக்கட்டும்.
8.      வரும் வருடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்கள் விடைக்குறிப்புடன் வழங்கினால் இன்னும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் அம்மாதிரி விளனாத்தாள் புத்தகம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
9.      கருத்தரங்கங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு பாடத்திட்ட பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால் அவையெல்லாம் தேர்வை எதிர்பார்த்தும் மதிப்பெண்களை நோக்கியுமே நடத்தப்படுகின்றன… படிக்கப்படுகின்றன.. வேதனையாக இருக்கிறது. கருத்தரங்கங்கள் மாவட்ட அளவில் நடத்துவதற்கும் பரிசளிப்பதற்கும் ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும்.. மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது குறைந்து இயல்பாக எழுதும் நிலை வரும்.
10.  தேர்வை எழுதுவதற்கு மூன்று மணிநேரம் என்பதை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்கலாம்.. எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்காக மூன்று மணி நேரம் அந்த பிஞ்சு கைகளை தொடர்ந்து எழுதப் பழக்கப்படுத்துவது சரியல்ல என்றே படுகிறது. மேலும் தேர்வறையில் ஆசிரியர்களுக்கு உட்கார நாற்காலி என்பதையும் மறுபரீசலனை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட தேர்வு நாட்களில் தொடர்ந்து தேர்வு நடைமுறைகள் என் சுமார் நான்கு மணி நேரம் நிற்க வேண்டிய சூழல் உண்டாகிறது.. அதையும் கவனத்தில் கொண்டால் நலம். 20 மாணவர்கள் அமரக்கூடிய தேர்வறையில் ஆசிரியர்கள் அமர்ந்தால் பார்த்து எழுதிவிடுவார்கள் என்பது மாணவர்கள் பார்த்து எழுதட்டும் என்று நினைத்துவிட்டால் வாசிலிலேயே நின்று கொண்டு அதைச் செய்துவிட முடியும். ஆனால் ஒரு நல்லாசிரியர் அப்படி செய்வதில்லை. ஆகவே தேர்வறையில் நாற்காலி என்பதையும் மறுபரீசலனை செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டி விரும்பி ஆகட்டுக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைகள் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் தான். ஏதேனும் குறைகள் விமர்சனங்கள் என்றால் கமெண்ட்ஸ் வரவேற்கப்படுகின்றன… பேசலாம்….
bala 1மு.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,பிஎட்., டி.டி.எட்.,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்)
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305  புலனம் 9698995853

Monday, March 30, 2020

திருமண வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இருவருக்கும்..... இல்லற வாழ்வில் இனிமையான வாழ்வு அமைய இறைவனை வேண்டுவேன்......

உங்களுக்கு ஒன்று என்றால் அவளிடமும் அவளுக்கு ஒன்று எனில் உங்களிடமும் மனம்விட்டு பேசி தீர்த்துவிடுங்கள்...

இதைச்சொன்னால் தப்பா நினைப்பாங்களோ என்று இருவருமே எண்ணக்கூடாது...

எது என்றாலும் நான்கு சுவர்களுக்குள் தீர்த்துவிடுங்கள்.... ஊடல் வராது என்று சொல்ல மாட்டேன்... வரும்...

நிறைய தட்டிக்கொடுத்தலும் அதிகமான விட்டுக்கொடுத்தலும் உங்கள் இல்லற வாழ்வை இன்னும் அழகாக்கும்....

ஊடல் அவசியம்...
*ஊடல் இருந்தால் கூடல் கூடகொஞ்சம் நிகழும்*..

அனுபவித்து பாருங்கள் சொன்னது உண்மை என்று உணர்வீர்கள்..

*அன்றைய ஊடல் இரவின் இடைவிடாத முனகல்களால் முற்றுப்பெறட்டும்...*
எக்காரணம் கொண்டும் அடுத்தநாள் தொடரவே கூடாது.... எது செய்தாலும் அவளின் ஐடியாவையும் கேளுங்கள்...

அவள் என்ன புது ரெசிப்பி செய்தாலும் அதை வாழ்வில் இப்படி சாப்பிட்டதே இல்லை என்று அவளின் ரெசிப்பியை அகில உலக அளவில் புகழ்ந்திடுங்கள்....

பல நேரங்களில் பல லட்சம் செலவு செய்து வாங்கிகொடுக்கும் பொன்நகைககளின் இடத்தை 100 முழம் மல்லிகைப்பூ முப்பது ரூபாயில் உச்சகட்ட இன்பத்தை தரும்.. தெரிந்து கொள்ளுங்கள்....

வெளி இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.. மேற்படிப்புக்கு வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக படிக்க வையுங்கள்.. அதற்கு தகுந்தாற்போல் பிளான் பண்ணிக்கோங்கள்...
அடிக்கடி தொடர்பில் இருங்கள்... ஆப் லைனில் இல்லையென்றாலும் ஆன்லைனில் எப்பவும் தொடர்பில் இருங்கள்....
ஊடலும் கூடலும் உங்கள் வாழ்வை செம்மையாக்கும்...
அண்ணனின் வாழ்த்துக்கள்....
முக்கியமான செய்தியை தவறவிட்டுவிட்டேன்
* குழந்தைகள் தினம் நவம்பர் மாதம் 14* நினைவில்கொள்......

வாழ்த்துக்கள் இருவருக்கும்......
அன்புடன்………. சகிபாலா.....